
2007 மே 18 : தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
ஆகஸ்ட் 28 : டிராய் (மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சந்தை விலை நிர்ணயம் உள்ளிட்ட பரிந்துரைகளை தொலைத்தொடர்பு அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆகஸ்ட் 28 : ராஜா தலைமையிலான மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் டிராயின் பரிந்துரைகளை அடியோடு நிராகரித்தது. மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அதே நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. அதாவது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் சந்தை விலையாக ஜூன் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை நிர்ணயம் செய்வதோடு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை அளிப்பது என்ற நடைமுறையை பின்பற்ற முடிவு செய்தது. 2001ம் ஆண்டில் 40 லட்சம் மொபைல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். ஆனால் 2007 முதல் 2008ம் ஆண்டு வரையிலான காலத்தில், மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருந்தது. இதனால் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை வசூலித்ததால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில்தனியார் நிறுவனங்கள் பெருமளவில் பயனடைந்து அரசுக்கு வரவேண்டிய நிதி வராமல் பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக இந்த முடிவு அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
செப்டம்பர் 20-25 : "யூனிடெக்', "லூப்', "டாடாகாம்' மற்றும் "ஸ்வான்' ஆகிய நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமத்தை பெற்றன. இதில் "யூனிடெக்' மற்றும் "ஸ்வான்' ஆகிய இரு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் எந்தவித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள். இவை அமைச்சர் ராஜாவுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
2007 டிசம்பர்: இவ்விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சக அதிகாரி ராஜினாமா செய்தார், அப்போது, தொலைத்தொடர்புத்துறை அமைச்சக செயலாளர் ஓய்வு பெற்றுவிட்டார். "ஸ்வான்' நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு எளிதாக நிறைவேறியது.
2008 ஜனவரி 1-10: அமைச்சர் ராஜா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது முன்னாள் செயலாளராக பணியாற்றிய"சித்தார்த்தா பெகுராவை', தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக நியமித்தார். பின்னர் தொலைத்தொடர்பு அமைச்சகம் 10 நாட்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுக்கான ஒன்பது லைசென்ஸ் உரிமங்களை வழங்கியது. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களும் ஒதுக்கீடு பெற்றன.
செப்டம்பர்-அக்டோபர்: "ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு ஏறத்தாழ 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைதொடர்புத் துறை லைசென்சை 1,661 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து "யூனிடெக்' நிறுவனம் வாங்கியிருந்தது. டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13, 230 கோடி ரூபாய்க்கு விற்றது.
இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் 60,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் ஜனவரி, 2008ம் ஆண்டு வரையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மொத்தமாக 2001ம் ஆண்டு விலை நிர்ணயத்தின்படி 122 லைசன்ஸ் வழங்கி உள்ளது.
நவம்பர் 15 : மத்திய தலைமை விஜிலென்ஸ் கமிஷன் அமைச்சர் ராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது தொடர்பான தனது விரிவான அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியது.
2009 அக்டோபர் 21 : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக நவம்பர் 29, 2008 , அக்டோபர் 31, 2009 , மார்ச் 8, 2010 , மார்ச் 13, 2010 ஆகிய தேதிகளில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி கடிதங்களை எழுதி உள்ளார்.
2010 ஏப்ரல் 12 : சுப்ரமணிய சுவாமி டில்லி ஐகோர்ட்டில் "ரிட்' மனு தாக்கல்.
அக்டோபர் 29 : மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், மந்தமாக செயல்படுவதாக கூறி சுப்ரீம்கோர்ட் தனது கண்டனத்தை தெரிவித்தது. "இதேபோன்ற நடைமுறையை தான் அனைத்து வழக்கிலும் கடைப்பிடிப்பீர்களா', என்று சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது.
நவம்பர் 10: மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம், மத்திய நிதி அமைச்சகத்திடம் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 11: மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெற வில்லை எனவே இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தது.
நவம்பர் 14: ராஜா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜா: வாழ்க்கைக் குறிப்பு :
பெயர்: ஆ. ராஜா
பிறந்த இடம்: பெரம்பலூர்
தந்தை: எஸ்.கே.ஆண்டிமுத்து
தாயார் : சின்னப்பிள்ளை
பிறந்ததேதி: 1963 அக்டோபர் 5.
கல்வி தகுதி: பி.எஸ்.சி., மற்றும் எம்.எல்.,
மனைவி : எம்.ஏ.பரமேஸ்வரி
குழந்தைகள்: மகள் மயூரி
கட்சி: தி.மு.க.,
தொகுதி: நீலகிரி
வகித்த பதவிகள்: 1996ல் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி., ஆனார். 1999 லோக்சபா தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார். பின்னர் குடும்ப நலம் மற்றும் சுகாதார அமைச்சராக பதவி வகித்தார்.
2004 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று ( 2004 மே 23 - 2007 மே 17,) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரானார். பின்னர் 2007 மே 18ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த 2009 மே 31ல் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றார்.
கட்சித் தலைமையிடத்தில் அவருக்கு இருந்த செல்வாக்கால், வட்டார அளவில் செல்வாக்குப் பெற்றிருந்த அவர், மத்திய அமைச்சராகும் அளவுக்கான தகுதியை குறுகிய காலத்தில் பெற்றார். இலக்கியத்தில் ராஜாவுக்கு இருந்த திறமைதான் கட்சித் தலைவர் கருணாநிதியிடம் அவர் நெருக்கமாகக் காரணமாக அமைந்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் அவருக்கு நெருக்கடி இருந்த போதிலும், கட்சித் தலைமையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்
நன்றி :தினமலர் நாளிதழ்