ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப் போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம்.
ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம்.
ஆனால், இந்திரா காந்தி, ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, ‘உலகமெல்லாம் நடப்பதுதான்’ என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர். இது நடந்தது 1983-ம் ஆண்டில்.
இந்திரா காந்தி இப்படிப் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டின் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், ஊழல் சகஜமான ஒன்றுதான் என்று கூறினால், ஊழலை எப்படி ஒழிப்பது என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டார். ஆனால், இந்திராவின் இந்தப் பேச்சு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆம். தம்மைப் பரிசுத்தமானவர் என்று கூறிக்கொள்ளாத ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்திரா மீது எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழவேயில்லை.
இப்படி அரசியலில் எதார்த்தமாக இருந்த இந்திராவுக்கு நேர் எதிரானவராக ராஜீவ் நடந்து கொண்டார். தம்மை திருவாளர் பரிசுத்தம் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையடைந்தார். அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விளைவு, போபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, 1989-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சி பறிபோயிற்று.
உண்மையிலே நேர்மையானவராக இல்லாதபோது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்வது கூடாது என்பதுதான் இதனால் அறியப்பட்ட அரசியல் பாடம். இந்தப் பாடத்தை சோனியா காந்தி தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஊழலைப் பற்றிப் பேசும்போது இந்திராவின் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுக்காமல், ராஜீவின் அபாயகரமான வழியை சோனியா தேர்ந்தெடுப்பாரா?
அலாகாபாத் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், ‘ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று ஆவேசமடைந்தார். அத்துடன் விடவில்லை. ஒருவாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தன்னைப் பரிசுத்தமானவராகவும், எந்தவித ஊழல் கறையும் படியாதவராகவும் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டார். ‘ஊழலை வேரறுக்க வேண்டும்’ என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலுக்கு எதிராக உடனுக்குடன் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் முழங்கினார். இந்த முழக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜீவ் காந்தி பேசியதைத்தான் நினைவுப்படுத்துகிறது.
இருப்பினும், ராஜீவுக்கும் சோனியாவுக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும். தம்மை ‘திருவாளர் பரிசுத்தம்’ என்று ராஜீவ் கூறிக் கொண்டபோது, அவருக்கு எதிராக எந்த ஊழல் புகாரும் இருக்கவில்லை. அதனால், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசினார் என்று கூற முடியாது. ஆனால், இப்போது காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடுகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் என ஒன்றன்பின் ஒன்றாகக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில், ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கூறிவருவது முரண்சுவையாக அல்லவா இருக்கிறது.
இரண்டாவது வேறுபாடு, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜீவ், போபர்ஸ் ஊழல் வெளியாகும்வரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தார். இதற்கு நேர் எதிராக சோனியா மீது ரகசியமான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், போபர்ஸ் கமிஷன் என நம்பத் தகுந்த ஊழல் புகார்களும், அவருக்கு எதிரான அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களும் வெளியாகியிருக்கின்றன.
சோனியாவின் குடும்பம் லஞ்சம் பெற்றதாக பிரபல சுவிஸ் பத்திரிகையில் ரஷியப் புலனாய்வுச் செய்தியாளர் ஆதாரத்துடன் எழுதிய கட்டுரைக்கு சோனியாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கவும் இல்லை. பின்னணி இப்படி இருக்கையில், ‘திருடன், திருடன்’ என்று திருடனே கத்திக் கொண்டு தப்பி ஓடுவதுபோல, ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சோனியா என்பதுதான் வேடிக்கை.
2.2 பில்லியன் டாலர் கதை1991-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் ‘ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட்’ இதழ் சோனியாவைப் பற்றி அதிர்ச்சிகரமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ராஜீவ் காந்தி உள்ளிட்ட 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் ரகசியங்கள் அதில் அம்பலமாகின. போபர்ஸ் பேரத்தில் கிடைத்த லஞ்சப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் பகிரங்கமாகக் கூறப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு ஏதோ போகிறபோக்கில் கூறப்பட்டதல்ல. குற்றச்சாட்டைக் கூறிய ஸ்வீசர் பத்திரிகையும் சாதாரணமானதல்ல. 2.15 லட்சம் பிரதிகள் விற்கும், 9.17 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபலமான பத்திரிகை. சுவிட்சர்லாந்தில் ஆறில் ஒருபங்கினர் இதை வாசிப்பதாகப் புள்ளிவிவரம் இருக்கிறது. இப்படித் தரமான ஒரு பத்திரிகைதான் ராஜீவ் மீதும் சோனியா மீதும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது.
ரஷியாவின் உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களை மேற்கோள்காட்டி, ‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா ரகசிய வங்கிக் கணக்கில் 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை மைனரான தனது மகனின் பெயரில் வைத்திருக்கிறார்’ என்று ஸ்வீசர் கூறியது. அந்தவகையில் பார்த்தால், ராகுலுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது 1988-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே, இந்த 2.2 பில்லியன் டாலர் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்குச் சமம்.
வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்விஸ் வங்கிகள் அப்படியே முடக்கி வைப்பதில்லை. வாடிக்கையாளர்களின் சார்பில் பல்வேறு வகைகளில் அந்தப் பணம் வங்கியால் முதலீடு செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலப் பங்குப் பத்திரங்களில் அந்த லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டில் அந்தப் பணம் ரூ. 42,345 கோடியாகப் பெருகியிருக்கும். அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ரூ. 58,365 கோடியாக வளர்ந்திருக்கும். இரண்டிலும் சரிபாதி என்ற வகையில் முதலீடு செய்திருந்தால் ரூ. 50,355 கோடியாகியிருக்கும்.
இந்தப் பணத்தை 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்துக்கு முன்பு எடுத்திருந்தால் ரூ. 83,900 கோடி கிடைத்திருக்கும். இதில் எந்த வகையில் கணக்கிட்டாலும் சோனியாவின் குடும்பத்துக்கு ரூ. 43,000 கோடியிலிருந்து ரூ. 84,000 கோடிக்குள் ஏதோ ஒரு அளவில் பெரும் பணம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவு.
கேஜிபி ஆவணங்கள்சோனியா மீதான இரண்டாவது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு இன்னும் கடுமையானது. யெவ்ஜீனியா அல்பேட்ஸ் என்கிற ரஷியப் புலனாய்வு எழுத்தாளர் எழுதிய ‘தி ஸ்டேட் வித்இன் ஏ ஸ்டேட்: தி கேஜிபி அண்ட் இட்ஸ் ஹோல்ட் ஆன் ரஷியா – பாஸ்ட், பிரசன்ட், ப்யூச்சர்’ என்ற புத்தகத்தில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.
‘அரசியல் காரணங்களுக்காக கேஜிபியிடம் இருந்து நேரு குடும்பம், அதாவது ராஜீவ் காந்தியின் குடும்பம் லஞ்சம் பெற்றது’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் கூறியிருக்கிறார்.
கேஜிபி ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்தப் புத்தகத்தில் வரும் ஒரு செய்தி: 1982-ம் ஆண்டில் கேஜிபி தலைவராகப் பொறுப்பேற்ற விக்டர் செப்ரிகோவ் கையெழுத்திட்டிருக்கும் கடிதமொன்றில், ‘இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுடன் சோவியத் யூனியனின் கேஜிபி, நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வர்த்தக அமைப்புகள், பிரதமர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு அளித்த வாய்ப்புகள் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து ஆர்.காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தவகையில் கிடைத்த பணத்தை ஆர்.காந்தியின் கட்சிக்காகப் பயன்படுத்துவதாக அவர் ரகசியமாகத் தெரிவித்திருக்கிறார்’ (பக்.223)
இன்னொன்றையும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார். ‘ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியாவின் தாயார் பவுலா மைனோ ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் பணம் அளிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் அனுமதி கோரி செப்ரிகோவ் கடிதம் எழுதியிருக்கிறார்’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே ரஷியாவின் பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தன. இவற்றைக் கொண்டு 1992-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தி ஹிந்து நாளிதழ், ‘ராஜீவ் காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு லாபகரமான வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் கேஜிபி ஈடுபட்டிருப்பதை ரஷியாவின் உளவுத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது’ என்று செய்தி வெளியிட்டது.
இந்திய ஊடகங்கள்ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சுவிஸ் மற்றும் ரஷியாவில் அம்பலமான சோனியாவின் ஊழல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸின் தலைவர் பதவியை சோனியா ஏற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்குள்ளேயே இந்திய ஊடகங்கள் முடங்கியிருந்தன.
ராஜீவின் மரணத்துக்கு முன்பாக, 1988 டிசம்பர் 31-ம் தேதி ஸ்டேட்ஸ்மேன் இதழில் பிரபல கட்டுரையாளர் நூரானி எழுதிய கட்டுரையில் ஸ்வீசர் மற்றும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளைக் குறிப்பிட்டிருந்தார். 2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஸ்வீசர் இதழ் மற்றும் அல்பேட்ஸின் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களைத் தனது இணையதளத்தில் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்டிருந்தார். ராஜீவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்யும் ஸ்வீசர் இதழ் அனுப்பிய மின்னஞ்சலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதியின் அசல் படியையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஸ்வீசர் இதழ் அனுப்பியிருந்தது.
‘ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று 27.04.2009 அன்று மங்களூரில் சோனியா பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், 29.04.2009 அன்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் நான் எழுதிய கட்டுரையிலும் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன். ஸ்விஸ் வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரே, அதை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று பேசுவது எப்படி என அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இதற்கு முன்பாக 15.06.2006 அன்று பிரபல பத்திரிகையாளர் ரஜீந்தர் பூரி இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதேபோல், 27.12.2010 அன்று இந்தியா டுடே இதழில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் எங்கே என்று ராம்ஜேட்மலானி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆக, இந்திய ஊடகங்கள் சோனியாவின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அமல் தத்தா இதுபற்றி 7.12.1991-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். ஆனால், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் இதற்கு அனுமதிக்கவில்லை.
மௌனமே குற்றச்சாட்டுக்கு ஆதாரம்1991-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து, ரஷிய, இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவும் ராகுலும் எந்தவகையிலும் பதிலளிக்கவில்லை. அவர்களது பதில் வெறும் மௌனமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்படி மௌனமாக இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.
ராஜீவ் காந்திக்கு வந்த ஊழல் பணத்தை ராகுல் பெயரில் சோனியா ஸ்விஸ் வங்கியில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று ஸ்வீசர் இதழ் கூறியபோது, அந்தக் குற்றச்சாட்டை எந்த வகையிலும் இருவரும் மறுக்கவில்லை. ஸ்டேட்ஸ்மேன் இதழில் நூரானியின் கட்டுரை வெளியானபோது, அந்த இதழ் மீதோ நூரானி மீதோ, தாயும் மகனும் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. எல்லா ஆவணங்களையும் சுப்பிரமணியன் சுவாமி தனது இணையதளத்தில் வெளியிட்டபோது அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனது கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் வந்தபோது என் மீது வழக்குத் தொடுக்கத் துணியவில்லை. தி ஹிந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கேஜிபி பணப்பட்டுவாடா குறித்து செய்தி வெளியிட்டபோது ரஷியாவே அதிர்ந்தது. அப்போதும் சோனியாவும் ராகுலும் எதுவும் நடக்காததுபோல்தான் இருந்தார்கள். இப்படி எப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சோனியாவும் ராகுலும் மௌனம் சாதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சோனியாவின் விசுவாசிகள் அப்படி இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழில் அல்பேட்ஸின் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சோனியாவின் ஊழல் குறித்த முழுப் பக்க விளம்பரம் ஒன்று வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோனியா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சோனியாவுக்கே வழக்குத் தொடரத் துணிவில்லாதபோது, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்குக்கூட அவதூறு வழக்காகத்தான் இருந்ததே தவிர, 2.2 பில்லியன் குற்றச்சாட்டை எதிர்க்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோனியா நேர்மையானவர், ஸ்வீசர் இதழும் அல்பேட்ஸின் புத்தகமும் கூறுவதுபோல அவர் கேஜிபியிடம் பணம் பெறவும் இல்லை, ஸ்விஸ் வங்கிக் கணக்கும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். குற்றச்சாட்டுகள் எழும்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டாமா?
ஒரு நேர்மையானவர், பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர் இப்படி மௌனமாகவா இருப்பார்?