
திடீரென அவசர வேலைக் காரணமாக செல்லும் பயணிகளுக்காக, இரயில்வே துறையில் தக்கல் முறை நடைமுறைப் படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தக்கல் முறையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பதிவு செய்ய முடியும்.இதன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு சாதாரண கட்டணத்தை விட கூடுதல் கட்டணமாக ரயில்வே துறை வசூலிக்கும். ஆனால், இந்த முறையில் காலை எட்டு மணிக்கு திறக்கும் தக்கல் டிக்கெட் கவுண்டர் அரை மணிநேரத்துக்குள்ளேயே, விற்று தீர்ந்து விடும். நீங்கள் சாதாரண ஒரு ஆளாக இருப்பின், நிச்சயமாக தக்கல் முறையில் ரிசர்வ் செய்ய முடியாது. காரணம், இன்னும் இன்னும் கூடுதலாக வசூலித்துக் கொண்டு , டிக்கெட் வாங்கித் தர புரோக்கர்கள் செயல்படுகிறார்கள். அதுவும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் காலை எட்டு மணிக்கு திறக்கும் முன்பதிவு மையத்துக்கு,இரவு ரயில்வே சர்ட்டர் கதவை சாத்தும் பொழுதே, புரோக்கர்கள் இடத்தை ஆக்கரமித்து படுத்துக் கொள்கின்றனர். நீங்கள் இரவு மூன்று மணிக்கு போனால் கூட கூட்டம் நிரம்பி வழியும். அரை மணிநேரத்தில் எல்லா இடங்களிலும் புக்கிங் செய்வதால், மாம்பலம் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் புரோக்கர்கள் மட்டுமே வாங்கியிருப்பர். மீதமுள்ள சகபயணிகள் டிக்கெட் இல்லாமல் திரும்பி போக வேண்டியது தான். இது தினமும் நடக்கும் பிஸினஸ். இதனால் நேரடியாக வந்து டிக்கெட் வாங்கும் நடுத்தர வர்க்கம் மிகவும் பாதிப்படைகிறது.‘ஊருக்கு செல்லும் பயணியா நீங்கள்?’ என்று அடையாள அட்டைகளை காண்பிக்க சொல்லி பரிசோதித்து விட்டு அவர்களுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்தால், நல்லது. இல்லையென்றால் புரோக்கர்களின் கொடி மட்டுமே பறக்கும். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
No comments:
Post a Comment